மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் அருகே இறையூர் வேங்கைவயல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் வகையில், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை தான் அப்பகுதி மக்கள் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியாக கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அப்பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட ஒவ்வாமை பிரச்சனைகள் இருந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை அணுகியபோது உணவு அல்லது குடிநீரில் ஏதேனும் பிரச்சனை இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

குறுகிய காலத்தில் கிராமத்தில் உள்ள அதிகமான மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஊர் மக்கள் தண்ணீர் தொட்டியில் ஏதேனும் விலங்கு இறந்து கிடக்கலாம் என்ற சந்தேகத்தில் தண்ணீர் தொட்டியில் ஏறி பார்த்துள்ளனர். அப்போது தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக தொட்டியில் உள்ள தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு தொட்டியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.