அசாம் மாநிலத்தின் கவுகாத்தி, பார்பேடா, மற்றும் மொரிஹன் ஆகிய மாவட்டங்களில் மத்திய புலனாய்வு துறையுடன் இணைந்து மாநில காவல்துறையினர் கடந்த மாத இறுதியில், அதிரடியாக சோதனை நடத்தினர். அவர்கள் நடத்திய சோதனையில் வங்காளதேசத்தில் இயங்கி வரும் அன்சருல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த, முப்தி முஸ்தபா, அம்ருதின் அன்சாரி, மமுன் ரஷித் உட்பட 12 பேரை காவல்துறையினர், கைது செய்தனர்.
‘அன்சருல் இஸ்லாம்’ வங்காளதேசத்தில் இயங்கி வரும் சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்கொய்தாவின் கிளை தீவிரவாத அமைப்பாகும். கைது செய்யப்பட்டவர்களில் முப்தி முஸ்தபா என்பவர் இந்த தீவிரவாத அமைப்புடன் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், வெளி நாடுகளில் தேடப்படும் குற்றவாளிக்கு முஸ்தபா அவர் நடத்தி வந்த மதப்பள்ளியில் தங்க வைத்து, பிறகு அங்கிருந்து வேறு இடத்திற்கு தப்பிக்க வைப்மதும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மொரிஹன் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய மதப்பள்ளியை இன்று ஜேசிபி வாகனத்தை வைத்து இடித்து தரைமட்டமாக்கினர். முப்தி முஸ்தபா 2017-இல் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் இஸ்லாமிய சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்நிலையில், அவர் நடத்தி வந்த பள்ளியில் படித்து வந்த 43 மாணவர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹிம்மந்த் பிஸ்வா தெரிவித்துள்ளார்.