நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 80 விழுக்காடு தோல்வி அடைந்துள்ளதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசுப்பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் தோல்வியடைந்திருப்பது வேதனையளிக்கிறது. மருத்துவப்படிப்பில் சேரும் அளவுக்கு இல்லாவிட்டாலும், நீட் தேர்வில் வெல்லும் அளவுக்குக்கூட அரசுப்பள்ளி மாணவர்கள் தயார்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.
2022-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 51.20% மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10% குறைவு ஆகும். 2020-ஆம் ஆண்டில் 57.40% ஆகவும், 2021-ஆம் ஆண்டில் 54.40% ஆகவும் இருந்த நீட் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடப்பாண்டிலும் குறைந்து இருப்பது வருத்தமளிக்கிறது. மாணவர்களின் மதிப்பெண் விகிதமும் பெருமளவில் குறைந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.