குடிபோதையில் நடக்க முடியாமல் இருந்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவரை பாஜகவினர் தூக்கி சென்ற காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அசோக்குமார். பாஜகவைச் சேர்ந்த இவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி பல்லடம் ராயர்பாளையத்தில் பாஜவின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாதப்பூர் பஞ்சாயத்து தலைவருமான அசோக்குமார் கலந்து கொண்டார்.

கூட்டத்தை முடித்து கட்சித் தொண்டர்களுடன் சென்ற மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார், பொங்கலூர் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு போதை தலைக்கேறிய நிலையில், அவர் நடக்க முடியாமல் இருந்துள்ளார். உணவருந்த நண்பர்கள் அழைத்த நிலையில், போதை தலைக்கேறியதால், எழுந்து செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடன் வந்த கட்சி தொண்டர்கள் நடக்க முடியாத அவரை தூக்கி செல்கின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.