விஷ எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் மலை அடிவார கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்வதாக தகவல் வெளியாகியுள்ளன. கரந்தமலையைச் சுற்றி உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டுப்பட்டி, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வகை எறும்புகள் பரவியதாக கூறப்படுகிறது. இது நாளடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் பரவின. தற்போது கிராமப் பகுதிகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இவை கண்களை மட்டுமே தாக்குவதாகவும், எறும்புகள் உடலில் ஏறுவதால் கொப்பளங்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றன. இந்த எறும்புகளால் காட்டிலுள்ள பாம்பு, முயல் போன்ற காட்டுயிர்கள் இறந்துவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும், காட்டெருது போன்ற பெரிய காட்டுயிர்களின் கன்றுகளையும் இந்த எறும்புகள் தாக்கி அழிப்பதாகக் கூறுகின்றனர். விவசாயிகளின் கால்நடைகளுடைய கன்றுகளையும் இவை கொல்வதால், எறும்புகள் பரவியுள்ள மலையடிவார விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் வீடுகளைக் காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்குக் குடி பெயர்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து கரந்தமலை வனத்துறை வனவர் கூறுகையில், இது புதுவகையான எறும்பாக உள்ளது என்றும் இதுபோன்ற எறும்பு வகைகளை இதுவரை நாங்களே கண்டதில்லை என்று தெரிவித்தார். மேலும், இந்த வகை எறும்புகள் அசுர வேகத்தில் பரவி வருவதாகவும், இவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கே தெரியவில்லை என்றும் இதனால், காட்டுயிர்கள் அழிவதாகவும் தெரிவித்துள்ளார்.