ஊடக நிறுவனங்கள், ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட பிரிவினர்களையும், எந்தவொரு வடிவத்திலும் பந்தயம், சூதாட்டம் குறித்த விளம்பரங்களை தவிர்க்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுரையைக் கடைப்பிடிக்கத் தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூதாட்ட மற்றும் பந்தய தளங்களின் விளம்பரங்கள் நுகர்வோருக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு, நிதி மற்றும் சமூகப்பொருளாதார ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்துவதற்காக, சூதாட்டப் பயன்பாடுகளின் பயனர்களிடமிருந்து கணிசமான பணத்தை வசூலித்த முகவர்களின் நெட்வொர்க்கிற்கு எதிரான சமீபத்திய மத்திய அரசின் நடவடிக்கையை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பொறிமுறை பணமோசடி நெட்வொர்க்குகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இதனால் நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.
ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் இந்திய பார்வையாளர்களைக் குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 13.06.2022, 03.10.2022 மற்றும் 06.04.2023 ஆகிய நாட்களில் அமைச்சகத்தால் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. சூதாட்டம் மற்றும் பந்தயம் ஒரு சட்டவிரோத நடவடிக்கை என்றும், எனவே எந்தவொரு ஊடகத் தளத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அத்தகைய நடவடிக்கைகளை விளம்பரப்படுத்துவது மற்றும் ஊக்குவித்தல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரஸ் கவுன்சில் சட்டம் 1978 உள்ளிட்ட பல்வேறு சட்டங்களுக்கு முரணானது என்று இந்த ஆலோசனைகள் கூறுகின்றன.
பந்தயம் / சூதாட்டத் தளங்களை விளம்பரப்படுத்துவதற்கு எதிராக ஊடக தளங்களை எச்சரிக்க அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. கணினி வளத்தைப் பயன்படுத்துபவர்கள், விளையாட்டு பற்றிய எந்தவொரு தகவலையும் வழங்கவோ, அதனை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, திருத்தவோ, வெளியிடவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோ கூடாது.