Google workers: ஆப்பிள் தனது ரகசிய AI ஆய்வகத்தை சூரிச்சில் அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கூகுள் (Google) நிறுவனத்தில் வேலை பார்த்த 36 முன்னாள் ஊழியர்களை பணியமர்த்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூகுளில் இருந்து ஆப்பிளுக்கு ‘ஜம்ப்’ அடித்த 36 ஊழியர்களுமே ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் துறையில் கில்லாடிகள் ஆவார்கள். இந்த குழு ஏஐ மாடல்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதற்காக ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வான டிம் குக் தலைமையிலான இந்த சீக்ரெட் லேப்பிற்கு கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களில் ஒருவரான ஜான் ஜியானன்ட்ரியா தான் உயர் ஏஐ நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். வெளியான அறிக்கையின்படி. இந்த சீக்ரெட் லேப் ஆனது சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனமானது, அதன் ஏஐ மற்றும் மெஷின் லேங்குவேஜ் குழுக்களை உலகளவில் விரிவுபடுத்துவதற்காக செய்யும் பல முயற்சிகளில், இந்த சீக்ரெட் லேப் ஆனது மிகவும் தந்திரமான ஒரு முயற்சியாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இது ஆப்பிள் நிறுவனத்தின் கையாளாகாத தனத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்துகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது சீக்ரெட் லேப்பிற்காக கடந்த 2018 இல் ஜான் கியானாட்ரியாவை பணியமர்த்தியது, பின்னர் ஒரு வருடம் கழித்து, கூகுள் மற்றும் ஓப்பன் ஏஐ ஆகிய இரண்டிலும் பணிபுரிந்த மிகவும் முக்கியமான வல்லுனர்களில் ஒருவரான இயன் குட்ஃபெலோவை பணியமர்த்தியது. இப்படியாக ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 36 ஏஐ நிபுணர்களை பணியமர்த்தியுள்ளது.
சமீபத்தில், அதன் ஐபோன் 16 சீரிஸில் (iPhone 16 Series) ஏஐ அம்சங்களை சேர்ப்பதற்காக ஆப்பிள் நிறுவனமானது ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்ப நிறுவனமான ஓப்பன்ஏஐ உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்விரு நிறுவனங்களும் ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை பற்றி விவாதிக்க தொடங்கியுள்ளன.
இதன்மூலம் ஆப்பிளின் அடுத்த ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 18-ல் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சில ஏஐ அம்சங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த கூட்டணி கூகுள் உடன் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த மாதம், ஆப்பிள் நிறுவனமானது தனது புதிய ஐபோன்களில் ஏஐ அம்சங்களை கொண்டு வருவதற்காக கூகுள் நிறுவனத்தின் ஜெமினி சாட்பாட்-ஐ பயன்படுத்துவதற்கான உரிமம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால் தற்போது அதே பேச்சுவார்த்தை ஓப்பன்ஏஐ-க்கு மாறியுள்ளதால்.. கூகுள் நிறுவனமானது ஆப்பிளுடன் ஒற்றுபோகவில்லை என்பது போல் தெரிகிறது.செப்டம்பர் மாதத்திற்கு (ஐபோன் 16 சீரீஸ் வெளியீட்டிற்கு) இன்னும் 4 மாதங்களே உள்ள நிலைப்பாட்டில் கூட எந்த நிறுவனத்துடன் கூட்டு சேர வேண்டும் என்கிற இறுதி முடிவிற்கு ஆப்பிள் இன்னும் வரவில்லை என்பது போல் தெரிகிறது.