மாவட்டம் தோறும் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டுமென தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாவட்ட வாரியாக நிலவரம் குறித்தும், தொண்டர்களின் மனநிலை குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை நேரில் சந்திக்க வேண்டுமென நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், “பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் தீர்ப்புக்குப் பின், சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு முன்பாக மாவட்டந்தோறும் அதிக அளவில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து நியமிக்க வேண்டும்” எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், எந்த பொறுப்பும் இல்லாமல் இருப்பவர்கள் உள்ளிட்டோரை தங்கள் பக்கம் அழைத்து, பொறுப்புகளை கொடுப்பது மற்றும் நிர்வாகிகளை சந்திப்பதற்காக சென்னை மந்தைவெளியில் தனி அலுவலகம் பார்க்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.