’மாண்டஸ்’ புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில், வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது புயல் சின்னமாக வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்களைத் தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
![நெருங்கும் ’மாண்டஸ்’ புயல்..!! பொதுமக்களே கவனம்..!! சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/cyclone-1.jpg)
புயல் கரையைக் கடக்குபோது மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதையொட்டி, காற்றின் வேகத்தின் காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக 272 மர அறுவை இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், ஒரு பகுதிக்கு ஒரு ஜே.சி.பி. என 45 ஜே.சி.பி. வாகனங்கள், 115 டிப்பர் லாரிகள் தயார்நிலையில் உள்ளன. ஒவ்வொரு கூடத்திலும் அவசரக் கால தேவைக்காக ஒரு சிறிய இலகுரக வாகனம் (Tata Ace) மற்றும் 10 பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![நெருங்கும் ’மாண்டஸ்’ புயல்..!! பொதுமக்களே கவனம்..!! சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2020/10/Marina-1.jpg)
வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை அறிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் மெரினா போன்ற கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதையோ அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின் கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். புயல் மற்றும் மழையின் போது பொதுமக்கள் தங்களின் அவசரத் தேவைக்காக அல்லது புகார்களைத் தெரிவிக்க மாநகராட்சியின் 1913 உதவி எண்ணிலும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைப்பேசி எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களின் புகார்களை விரைந்து பெறவும், அதன்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏதுவாக, 10 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 உதவி எண்ணானது, 50 இணைப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.