விசிக தலைவர் திருமாவளவனுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “விஷசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் உதவி நிதி உதவி செய்கிறது. இதுதான் திராவிட மாடல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ரூபாய் 10 லட்சம் நிதியுதவி விஷச் சாராயத்தை ஊக்குவிப்பதற்காகவா..? அதிமுக ஆட்சி காலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அரசு விற்றால் சாராயம்.. தனியார் விற்றால் கள்ளச்சாராயமா..?
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடியாது. வடமாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றதற்கு திருமாவளவன் தான் காரணம். அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் திமுகவிற்கு திருமாவளவன் தேவை. ஆதலால் திருமாவளவனை கூட்டணியில் இருந்து வெளியே விட மாட்டார்கள். அதிமுக பாஜக கூட்டணி இறுதியாகிவிட்டது. நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதை திருமாவளவன் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் தமிழர் கோட்பாடுகளை ஏற்று திருமாவளவன் உட்பட யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். தமிழகத்தில் மதுவை ஒழிக்க நினைப்பவர்கள் வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியமாகும்.
காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் வேறுபாடு இல்லை. இருவருமே ஒன்றுதான். ஊழல் பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் மேகதாது அணை கட்டுவதை திமுகவும் திருமாவளவனும் தடுக்க முடியுமா..? மேகதாது அணையை வைத்துதான் கர்நாடகாவில் நாடாளுமன்ற வாக்கு சேகரிப்பு நடைபெறும். இன்னும் 6 மாதத்தில் மேகதாது அணை கட்டுவார்கள் இதை தடுக்க முடியுமா..?” என்று கேள்வி எழுப்பினார்.