தற்போதுள்ள வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்காமல் பலர் தவித்து வருகின்றனர். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பலர் படுக்கைக்கு செல்கின்றனர்.. ஆனால் அந்த பழக்கம் ஆரோக்கியத்தை எவ்வளவு மோசமாக பாதிக்கும் என்பதை உணராமல், பாதிப்பு ஏற்பட்ட பிறகு வருந்துகிறார்கள். உண்மையில் சாப்பிட்ட உடனே தூங்குவதால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும், மேலும் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உணவு மற்றும் உறக்கத்தை சரியான முறையில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.
பாதிப்புகள் : சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு சரியாக ஜீரணமாகாது, இதன் காரணமாக எடை அதிகரிப்பு, நெஞ்செரிச்சல், வாயு அமிலத்தன்மை, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் லேட்டாக சாப்பிடும் போது அதிகமாக சாப்பிடும் வாய்ப்புகள் அதிகம். தாமதமாக சாப்பிடும் போது கலோரிகள் எரிக்கப்படுவதில்லை. இவை ட்ரைகிளிசரைடுகளாக மாற்றப்படுகின்றன. இவை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உண்டு செய்யும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் இடையில் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். எனவே, உங்களின் கடைசி உணவை, அதாவது இரவு உணவை உறங்குவதற்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு முன் எடுக்க முயற்சி செய்யுங்கள். அதாவது இரவு 7 மணிக்கு முன்பே இரவு உணவை சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.
அப்படி இரவு 7 மணிக்கு முன்பு உணவை எடுத்துகொண்டால் அடுத்த நாள் காலை உணவுக்கு அதிக நேரம் கிடைக்கும். இது கொழுப்பு இழப்பை அதிகரிக்கிறது. இதனால் தூங்கும் போது உடல் கொழுப்பை ஆற்றலாக பயன்படுத்துகிறது. இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உறுதிப்படுத்த அதிக நேரம் கொடுக்கிறது. சீக்கிரமாக உணவை முடிப்பதால் படுக்கைக்கு முன் செயல்பாடுகளை செய்ய அதிக ஆற்றலை அளிக்கிறது. இதனால் உடல் சரியாக செயல்படும். காலையில் எழுந்ததும் சரியான நேரத்தில் உணவை சாப்பிடுவீர்கள். அதிக ஆற்றலுடன் உணர்வதோடு அந்நாளை சிறப்பாக திட்டமிட முடியும்.
இரவு உணவை முன்கூட்டியே உண்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் 26% குறைக்கப்பட்டதும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 16% குறைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
சாப்பிட்ட உடனே தூங்கும் பழக்கம் உள்ளவர்கள், உறங்குவதற்கு 3மணி நேரம் முன் உணவு அருந்தினால் நள்ளிரவு பசி ஏற்படும், அத்தகைய சூழ்நிலையில், நள்ளிரவு பசியை போக்க என்னென்ன விஷயங்களை உணவில் சேர்க்கலாம் என்பதை பார்க்கலாம்..
தூங்கும் முன் ஒரு கிளாஸ் சூடான பால் எடுத்துக் கொள்ளலாம். மிதமான பசியைக் குறைக்க ஒன்று அல்லது இரண்டு குக்கீகள் அல்லது பிஸ்கட் சாப்பிடலாம். முழு தானிய கொழுப்புக் குறைந்த பாலை குடிக்கலாம்.