நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ”அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் பாஜக உறுதியாக உள்ளது. அது எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி.. ஓ.பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி..! மத்திய அரசுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நன்மையாக இருக்கும்.. இல்லையென்றால், இழப்பாக அமையும்.
பாஜக மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணனுக்கு திமுகவிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஏற்கனவே டாக்டர் சரவணன் ஒரு மாத காலமாக திமுகவுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வந்தது. அமைச்சர் வாகனங்களில் தாக்குதல் நடந்த சம்பவத்தால் தான் டாக்டர் சரவணன் கட்சியை விட்டு வெளியேறினார் என்பதை காரணமாக சொல்ல முடியாது. நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு செல்கிறார் என்று சொல்லிவருகிறார்கள். எந்த எண்ணத்தில் அப்படி சொல்கிறார்கள் என தெரியவில்லை.
கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் பழகுபவன் நான். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் கலந்து கொண்டு நட்புறவோடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை வைத்து திமுக பாஜகவுடன் நெருங்கிறது என சொல்ல முடியாது. கவர்னர் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக கலந்து கொள்ளவில்லை என்பதற்காக பாஜக திமுகவுடன் இருந்து விலகி உள்ளது எனவும் சொல்ல முடியாது. ”பாஜக மத்திய அரசு.. திமுக மாநில அரசு” அவ்வளவுதான். மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவார். எப்போதும் பாஜக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. எங்களுடன் நட்பா நட்பில்லையா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.