ரஜினியிடம் ஆசிர்வாதம் பெற்று தான் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளதாக அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜகவில் மீண்டும் அர்ஜுன மூர்த்தி இணைந்து கொண்டார். இவர், நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர். அதற்காக பாஜகவில் இருந்து விலகி ரஜினிகாந்துடன் ஒட்டிக்கொண்டார். பின்னர், ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை இவர் தொடங்கினார். எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது பாஜக அறிவு சார் பிரிவு மாநில தலைவராக இருந்தவர் அர்ஜுன மூர்த்தி. இந்நிலையில், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் பாஜக சிறப்பான அந்தஸ்தை பெற உழைப்பேன். பதவி, அந்தஸ்துக்காக பாஜகவில் சேரவில்லை. ஆன்மீக அரசியல் தொடர்பான ரஜினியுடன், ஒருமித்த அரசியல் கருத்து இருந்ததால் நான் இணைந்திருந்தேன். இப்போது ரஜினியின் ஆசிர்வாதத்துடன்தான் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளேன். ரஜினியிடம் தெளிவான சிந்தனை, தொலைநோக்குப் பார்வை இருந்தது.
ரஜினி ஒரு கருத்தை கூற நினைத்தால் அதை வெளிப்படையாக கூறிவிடுவார். ரஜினி உட்பட அனைத்து இந்திய குடிமகனுக்கும் அரசியல் என்பது அடிப்படை உரிமை. அதை எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும். தொலைநோக்கு பார்வை இல்லாத அரசாக திமுக அரசு இருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.