மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்திப் சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை என்று கிரிக்கெட் வாரியம் வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்டம்புகளின் விலை குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் பஞ்சாப் வீரர்கள் தடுமாறினாலும் இறுதியில் சாம் கரன், ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர்.
இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து கேமரூன் க்ரின் களமிறங்கினார். ரோஹித் சர்மா, கேமரூன் இணை சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தது. ரோஹித் 27 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய கேமரூன் 67 ரன்களைக் குவித்தார். முந்தைய போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி 57 ரன்களைக் குவித்தார். தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியைத் தழுவியது மும்பை அணி. 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணி வெற்றி பெற முக்கிய காரணம் அர்ஷ்தீப் சிங்தான்.
அதாவது, பஞ்சாப்புக்கு வெற்றியை தேடித்தந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் கடைசி ஓவரில் துல்லியமாக வீசிய யார்க்கரில் திலக்வர்மா, வதேரா ஆகியோருக்கு மிடில் ஸ்டம்பு பாதியாக உடைந்து சிதறியது. கிரிக்கெட்டில் தற்போது நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஒளிரும் ஸ்டம்புகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த எல்.இ.டி. வகை ஸ்டம்பில் கேமரா, மைக்ரோ போன் பொருத்தப்பட்டிருக்கும். அர்ஷ்திப்சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை குறித்து சமூக வலைதளத்தில் ஒரு விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மூன்று அடங்கிய ஒரு செட் எல்.இ.டி. ஸ்டம்பு மற்றும் பெய்ல்சின் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை என்று கிரிக்கெட் வாரியம் வட்டாரங்கள் தெரிவித்தன. அர்ஷ்தீப் சிங் இரண்டு ஸ்டம்பை காலி செய்து விட்டதால் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பாகும்.