கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்க அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளதாகவும், இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் திட்டங்களில் மிகவும் வரவேற்பு பெற்ற திட்டம் என்றால் அது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இந்த திட்டத்தில் தற்போது 1 கோடியே 6 லட்சம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வருகின்றனர். உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்து பெண்கள் அனைவருக்கும் 3 மாதங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் ஜூலையில் புதிய பயனர்களுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும், விண்ணப்பம் ரிலீஸ் செய்யப்படும். அதன்படி, இந்த திட்டத்தில் கூடுதலாக 10 லட்சம் முதல் 15 லட்சம் பயனாளிகள் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் கடந்த முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், இம்முறை வட்டாட்சியர் அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, நேற்று (ஏப்ரல் 18) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குதல், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்காது..?
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய்க்கு அதிகமாக வைத்திருப்பவர்கள், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோர், 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், வருமான வரி செலுத்துவோர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்க முடியாது.
அதேபோல், ஆண்டு ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர், கார், ஜீப் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.