சந்திராயன் – 3 செயற்கைக்கோள் இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தியாகம் போற்றுவோம் அமைப்பு சார்பில், 75-வது சுதந்திரதின அமுதப் பெருவிழா நடைபெற்றது. இதில் 75-வது பிறந்தநாள் கொண்டாடும் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ”இந்தியாவின் வளர்ச்சியும், வல்லரசாக கூடிய தன்மையும் அதிகமாகியுள்ளது. மாணவர்களின் அறிவுத்திறமை வளரும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் நம் நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறும். நம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லுாரி மாணவர்களால் 75 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. அரசுப் பள்ளியில் தமிழில் படித்தவர்களுக்கு ராக்கெட் அறிவியல் பாடத்தை கற்று தருகிறோம்.

அதில் 500 பேர் பங்கேற்ற நிலையில், 110 பேரை தேர்வு செய்து ஹரிகோட்டாவுக்கு அழைத்துச் சென்று செயற்கைக்கோள் ஏவும் விதம் குறித்து நேரடியாக விளக்கம் அளித்தோம். அதில், 25 மாணவர்களை தேர்வு செய்து ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்ல உள்ளோம். சந்திரயான் – 3 செயற்கைகோள், இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதையொட்டி ‘டிரயல், டெஸ்டிங்’ நடந்து வருகிறது. சூரியனுக்கு, ஆதித்யா என்ற செயற்கைக்கோள், இஸ்ரோவில் இருந்து இரண்டு ஆண்டுகளில் விடப்பட உள்ளது. குறிப்பிட்ட துாரத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் சூரியனை ஆய்வு செய்யும்”. இவ்வாறு அவர் பேசினார்.