அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் ஊழியர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவர்களை கட்டிப் போட்டு வங்கியில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 20 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
![”அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்கு காப்பீடு உள்ளது” - வங்கி நிர்வாகம்](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Arumpaakkam.jpg)
மேலும், அதே வங்கியில் பணிபுரிந்த ஊழியர் முருகன் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதற்கிடையே, முருகனுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்த பாலாஜி என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் நகைகள் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் விசாரணையில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கொள்ளை சம்பவம் குறித்து மக்களிடையே தகவல் வெளியான நிலையில், அந்த வங்கியில் தங்கள் நகை, பணத்தை சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
![”அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்கு காப்பீடு உள்ளது” - வங்கி நிர்வாகம்](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Arumpaakkam-2.jpeg)
இந்நிலையில், நகைகள் மீட்கப்பட்டால் வழக்கு முடிந்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு அது திரும்ப கொடுக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. நகைகள் கிடைக்காத பட்சத்தில் இன்சூரன்ஸ் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்று வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.