ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரிகளுக்கான இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்டமுன் படிப்பு) பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள் : இணைப் பேராசிரியர் பதவியில் தொழில் சட்டம், குற்றவியல் சட்டம், சொத்து சட்டம், தொழிலாளர் சட்டம், நிர்வாக சட்டம். அரசியலமைப்பு சட்டம், சர்வதேச சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் நிரப்பப்படுகிறது.
உதவிப் பேராசிரியர் பதவியில் குற்றவியல் சட்டம், தொழிலாளர் சட்டம், சொத்து சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், நிர்வாக சட்டம், வரிவிதிப்பு சட்டம், சர்வதேச சட்டம், தொழில் சட்டம், மனிதநேய சட்டம், அரசியலமைப்பு சட்டம், அறிவுசார் சொத்து சட்டம், குடும்ப சட்டம், தகவல் தொடர்பியல் மற்றும் சைபர் பாதுகாப்பு சட்டம், ஆங்கிலம், சமூகவியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு : சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர் பதவிக்கு அதிகபடியாக 45 வயது வரை இருக்கலாம். உதவிப் பேராசிரியர் பதவிக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம். வயது வரம்பு தளர்வு குறித்து அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.
கல்வித் தகுதி :
* இணைப் பேராசிரியர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்லூரியில் சம்மந்தப்பட்ட சட்டப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 வருடம் உதவிப் பேராசிரியராக அல்லது அதற்கு நிகரான பதவியில் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும், NET/SLET/SET ஆகிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2009 அல்லது 2016 யுஜிசி விதிமுறைகள்படி, Ph.D பெற்றவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போன்று, 2009 ஜூலை 11 முன் Ph.D பட்டம் பெற்றவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை.
* சட்ட பாடங்கள் உதவிப் பேராசிரியர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்லூரியில் சம்மந்தப்பட்ட சட்டப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், NET/SLET/SET ஆகிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* சட்ட முன் படிப்பு உதவிப் பேராசிரியர் பதவிக்கு சம்மந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், NET/SLET/SET ஆகிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலையில் வேறு பாடம், முதுகலையில் வேறு பாடம் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை.
* இப்பணியிடங்களுக்கு தனிக்கல்வி, தொலைத்தூர கல்வி ஆகியவற்றில் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை. ஒரு ஆண்டு முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை. கல்வித் தகுதி குறித்த முழுமையான விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி? ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் தேர்வு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.