Fake doctor: பிரிட்டனை சேர்ந்த போலி இதய மருத்துவர் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தாமோவில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவராக ஜான் கெம் என்பவர் பணியாற்றுகிறார். இவர் போலி மருத்துவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இதய அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ஜான் கெம் பலருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பல நோயாளிகள் பின்னர் இறந்துள்ளனர்’’ என்றனர். வழக்கறிஞர் தீபக் திவாரி, ‘‘ இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் அதிகமானோர் இறந்திருக்கலாம். இவர் ஒரு போலி மருத்துவர். இவருடைய உண்மையான பெயர் நரேந்திர யாதவ்.
பிரிட்டனில் உள்ள பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணரான ஜான் கெம்மின் பெயரை இவர் தனக்கு சூட்டி கொண்டுள்ளார். ஐதராபாத்தில் இவர் மீது வழக்குகள் உள்ளன. இவர் தன்னுடைய ஆவணங்கள் எதையும் இதுவரை வெளியில் காட்டவில்லை’’ என்றார். இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து போலி டாக்டர் குறித்து விசாரணை நடத்துவதற்கு மாவட்ட கலெக்டர் சுதிர் கோச்சார் உத்தரவிட்டுள்ளார்.