தமிழ்நாடு ரேஷன் கடைகளில் தற்போது காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுனர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை அமைக்க வேண்டும் என்றும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு பொருளுக்கும் 2 முறை பில் போடும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து, 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜூன் 9ஆம் தேதியன்று மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.