அசாம் மாநிலத்தில் வசித்து வருபவர் 30 வயது ஜாகீர் உசேன். இவரது மனைவி 28 வயது கைரொன்னிஷா. இவர்களின் மகன் 7 வயது கைரல் இஸ்லாம். இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவை வந்தனர். பின்னர் ஜாகீர் உசேனும், அவரது மனைவியும் சூலூர் அருகே சின்ன கலங்கலில் உள்ள நூற்பாலையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். சிறுவன் கைரல் இஸ்லாம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான்.
இதையடுத்து, பிற்பகலில் கணவன் – மனைவி 2 பேரும் வீட்டிற்கு சாப்பிட வந்தனர். அப்போது வீட்டில் மகன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவனை சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவனின் கழுத்து மற்றும் முகத்தில் காயம் இருந்ததால் இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சிறுவன் பனியன் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சிறுவன் கொலை செய்யப்பட்டது மில் வளாகம் என்பதால் வெளியாட்கள் உள்ளே வரவாய்ப்பு இல்லை என்பதால், மில்லில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஜாகீர்உசேன் அக்காவும், சிறுவனின் அத்தையுமான நூர்ஜாகதுன் (32) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் நூர்ஜாகதுனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜாகிர் உசேனின் அக்காவான நூர்ஜாகதுன், அசாமில் இருந்தபோது, வேலையில்லாமல் தவித்து வந்துள்ளார். இதனால் தனது சகோதரியை கோவைக்கு வரவழைத்த ஜாகிர், தான் பணியாற்றும் மில்லிலேயே வேலை வாங்கி கொடுத்துள்ளார். மில்லில் ஆர்வத்துடன் வேலை செய்து வந்த ஜாகிர் உசேனுக்கு, மில்லின் உரிமையாளர் புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். இதனை நூர்ஜாகதுனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எப்படியாவது அந்த வீட்டிற்கு பிற்காலத்தில் உரிமையாளராக ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில், ஜாகிர் உசேனின் மகனை கொன்று, இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.