ஆண்டுதோறும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 3ஆம் தேதியன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கெளரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதில் ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாரட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள் :
* விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
* தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
* பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.
* இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர் நேரடியாகவோ அல்லது பரிந்துரையின் அடிப்படையிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
* விண்ணப்பதாரர்களில் ஒருவரே விருதாளராக அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.
மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தனது விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு 30.04.2024 க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.