மருத்துவத் துறையில் இன்னும் 10 நாட்களில் 4,300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட 29 துணை சுகாதார நிலையம் உட்பட புதிய கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அதன் பின்பு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் தமிழ் மன்றம் துவக்க விழா நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், நவாஸ் கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மருத்துவக் கல்லூரி தமிழ் மன்றத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்த பின்பு பேசுகையில், ”மதுரை எய்ம்ஸ் கல்லூரி என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கனவு எனவும் இந்த திட்டத்திற்காகத் முதலமைச்சர் கடுமையாகப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 3 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் சுமார் 200 வகையான மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட 4,300 காலிப்பணியிடங்கள் 10 நாட்களில் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

தவறான முடிவு எடுப்பவர்கள் எலி பேஸ்ட், சாணி பவுடர்களை தான் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிவித்த அவர், விரைவில் அதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், விற்பனை செய்யும் கடைகளில் இதை டிஸ்ப்ளே செய்யக்கூடாது என்றும் தனி நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் கூட்டாக வந்தால் தான் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.