அக்டோபர் முதல், சிம் கார்டு பெறுவதற்கான விதிமுறைகளில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. இதற்கு முன்னதாகவே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளிலும் தொலைதொடர்புத் துறை இறங்கியுள்ளது.
சாதாரண சைபர் குற்றங்கள் முதல் நிழலுலக சதித் திட்டங்கள் வரை என பலவற்றிலும் சிம் கார்டுகள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. அரசு வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படாது விற்பனை செய்யப்படும் சிம் கார்டுகளே, மோசடிகளின் பின்னே இருக்கின்றன. எனவே, சிம் கார்டுகளை விற்பனை செய்வதிலும், அவற்றை வாடிக்கையாளர் பெறுவதிலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே பெயரில் ஆயிரக்கணக்கான சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தொலைதொடர்புத் துறை விசாரணையில் பிடிபட்டுள்ளது. எனவே, வரும் அக்டோபர் மாதம் முதல், சிம் கார்டுகள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருக்கின்றன. போலி ஆவணங்கள் மூலம் தவறான நபர்களின் கையில் அதிகமான சிம் கார்டுகள் கிடைப்பதை அக்டோபர் மாதம் முதல் தடுத்து நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான தொலைதொடர்புத் துறை அறிவிப்பின்படி, முறைகேடாக சிம் கார்டு விற்பனையில் ஈடுபட்ட விற்பனை முகவர்கள் 67,000 பேர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிம் கார்டு அடிப்படையிலான புகார்கள் தொடர்பாக 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி பெறப்பட்டதுடன், இணையவழி குற்றங்களுக்கு துணை போனதாக சுமார் 52 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதில், மோசடியாளர்கள் பயன்படுத்திய பல்வேறு வங்கிகளின் 8 லட்சம் வாலெட் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இணைய மோசடிகளுக்கு துணைபோனதாக 66,000 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.