கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் முறையில் ரிசர்வ் வங்கி முக்கிய மாற்றங்களை அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.
நாடு முழுவதும் மக்கள் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் பணப்பரிவினை மேற்கொள்ளும் பொழுது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடன் அட்டையைப் பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் விவரங்கள் வாடிக்கையாளரின் அனுமதியுடன் வியாபார தளங்களில் சேமிக்கப்படுகிறது. வாடிக்கையாளர் ஓர் இணையதளத்தைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது ஒவ்வொரு முறையும் விவரங்களை பதிவிடாமல் விரைவாகப் பரிவர்த்தனைகள் செய்வதற்கு வாடிக்கையாளரின் ஒப்புதலுடன் இந்த விவரங்கள் சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்யும்போது வாடிக்கையாளரின் விபரங்களை வியாபாரத் தளங்கள் அறிய முடியும். இது முறைகேடு நடைபெறுவதற்கு இடம் கொடுக்கலாம். தற்போது ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவுபடி வியாபாரத் தளங்களில் சேமிக்கப்பட்டுள்ள விவரங்கள் அழிக்கப்பட இருக்கின்றன. கடன் அட்டை பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாக்கும் பொருட்டு டோக்கன் நடைமுறையை வங்கிகள் பயன்படுத்த தற்போது ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
அதன் படி டோக்கன் அமைப்பு அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தரவுகளையும் ‘டோக்கன்களாக’ மாற்றுகிறது. இதன் மூலம் உங்கள் கிரெடிட் கார்டின் தகவல்கள் சாதனத்தில் மறைத்து வைக்கப்படும். எந்த நபரும் கார்டை டோக்கனாக மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அட்டையை டோக்கனாக மாற்றம் செய்ய வாடிக்கையாளரிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது. உங்கள் கார்டை டோக்கனாக மாற்றினால், எந்த ஷாப்பிங் இணையதளத்திலோ அல்லது இ-காமர்ஸ் இணையதளத்திலோ உங்கள் கார்டு தகவல் டோக்கனில் சேமிக்கப்படும்.