பிஹார் மாநிலத்தில் சுபால் மாவட்ட பகுதியில் கிதாஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் ஸ்வர்னகர். இவருடைய மகள் பூஜாகுமாரி(21). இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வருகின்றனர். அர்ஜுன் முகியா(26) என்ற வாலிபர் இவர்களிடம் கஞ்சா வாங்க வந்துள்ளார். ஏற்கெனவே இவர் கஞ்சா வாங்கியதற்கான நிலுவை பணம் 950 ரூபாயைத் தரவில்லை.
இதனால் பழைய பாக்கியைத் தருமாறு பூஜாகுமாரி முகியாவிடம் கேட்டுள்ளார். ஆனால், விடாமல் கஞ்சா கேட்டு முகியா வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து பழைய பாக்கியைத் தந்தால் மட்டுமே கஞ்சாவை தருவேன் என்று பூஜா கூறிய நிலையில், முகியா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் சண்டை முற்றி கைகலப்பு வரை சென்றுள்ளது.
இதனால் பெரும் ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரியான பூஜா குமாரி, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வந்து அர்ஜுன் முகியா மீது வீசியுள்ளார். இதனால் முகியாவின் கழுத்து, முகம் மற்றும் மார்பு வெந்து போனது. இதையடுத்து அவரை சுபால் சதர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முகியா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பூஜா குமாரி மற்றும் அவரது தந்தை கணேஷ் ஸ்வர்னகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருந்த பூஜா குமாரியை போலீஸார் நேற்று இரவில் கைது செய்தனர். இன்னும் பிடிபடாத இவரது தந்தையைத் தேடி வருகின்றனர்.