மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.14) வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று தனது தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தயார் செய்துள்ளது. 27 பேர் கொண்ட அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த நாடும் இந்த ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற பெயர் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறது’ என்று தெரிவித்தார். இந்த தேர்தல் அறிக்கை ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
பாஜக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:
- ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தபடும்
- அடுத்த 5 ஆண்டுகள் இலவச ரேசன் நீட்டிக்கப்படும்
- 2025 ஆம் ஆண்டு பழங்குடியின ஆண்டாக கொண்டாடப்படும்
- 70 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆயுஸ்மான் பாரத திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்
- மத்திய அரசு காப்பீட்டு திட்டத்தில் திருநங்கைகள் இணைக்கப்படுவார்கள்
- மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.
- 2036ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- முத்ரா யோஜனா கடன் உச்சவரம்பு 20 லட்சமாக உயர்த்தப்படும்.
- மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
- வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும்.
- இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும்
- அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
- உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்த்தப்படும்
- திருவள்ளூவர் பெயரில் கலாச்சார மையம் உருவாக்கப்படும்