தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த 11-ஆம் தேதி சுதந்திரதின விழாவை முன்னிட்டு பாஜகவினர் கடந்த 11-ஆம் தேதி ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம், முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் தலைமையில் நடந்தது. இந்த ஊர்வலத்தில் 200-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது, அந்த பகுதியில் இருக்கும் பாரதமாத கோவிலுக்கு செல்ல பாஜகவினர் முற்பட்டனர். ஆனால் பாரதமாதா கோவில் பூட்டப்பட்டிருந்தது. கதவை திறக்க சொல்லி அங்கிருந்த கோவில் பாதுகாவலரிடம் கேட்டனர். அப்போது, அவர் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினார். இதனால், ஆத்திரமடைந்த ராமலிங்கம் தலைமையிலான பாஜகவினர் பாரதமாத கோவில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பாரதமாத சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கோஷமிட்டனர். பிறகு, வேறு ஒரு பூட்டை போட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் சிவலிங்கம், ஆறுமுகம், சிவசக்தி உட்பட ஐந்து பேர் முன்பே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பாரதமாத கோவில் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே சென்ற விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை காவல்துறையினர் இன்று அதிரடியாக கைது செய்தனர்.