பிளஸ்-2 தேர்வில் காதலன் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த விரக்தியில் பிளஸ்-1 மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டில்லி. இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகள் நந்தினி (வயது 16). இவர், பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த மாணவி நந்தினி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து நசரத்பேட்டை போலீசார், நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆவடி கோவர்த்தனகிரி, பாரதி நகர், 1-வது தெருவைச் சேர்ந்த தேவா (17) என்பவர், பிளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவரை மாணவி நந்தினி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தனது காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த நந்தினி, அந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.