படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் பிரட் ஆம்லெட், சாக்லேட், ஜூஸ் போன்றவற்றை ஓசியில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இந்நிலையில், அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட 4 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு செயல்பட்டு வரும் ஜூஸ் கடைக்கு சென்றுள்ளனர். மேலும், கடையில் இருந்த விற்பனையாளர்களிடம் இந்த 4 காவலர்களும் ஜூஸ் ,பிரட் ஆம்லெட், சாக்லேட், குடிநீர் கேன்கள் போன்றவற்றை ஓசியில் கேட்டு, தகராறில் ஈடுபட்டதோடு கடை உரிமத்தையும் ரத்து செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் ஜூஸ் கடையில் இரவு பணியில் ஈடுபட்ட 4 காவலர்களும் பொருட்கள் கேட்டு ரகளையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஜெயமாலா உள்ளிட்ட 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தற்போது உத்தரவு அளித்துள்ளார்.
இவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஓசியில் ஜூஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட காரணத்தால் 4 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.