தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில தினங்களாக சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், மேலும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், மேலும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.