மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இதனை எதிர்த்து காங்கிரஸ், திமுக என பல கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களோடு தனது தரப்பு மனுவையும் பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என விஜய் தரப்பு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்பு முறையிட்டது.
அப்போது, முறையீடு தொடர்பாக பதிவாளரிடம் கொடுத்த அனைத்து மனுக்களுக்கும் விசாரணை தேதி கொடுக்கப்பட்டுள்ளது. முறையீடு தொடர்பான கோரிக்கை கொடுக்கப்பட்டு இன்று முறையீட்டுக்கு பட்டியலிடப்படாத மனுக்கள் தொடர்பாக பதிவாளரை அணுகும்படி விஜய் தரப்புக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினர். மேலும், வக்ஃபு விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை தேதி கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார். இதுவரை வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 10 வழக்குகள் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.