fbpx

“அட, சுடுகாட்டிலுமா ஜாதி பார்ப்பீங்க.?” ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த மனிதாபிமானமற்ற சம்பவம்.!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏ.இராமலிங்கபுரம் என்ற கிராமத்தில் மாரிச்சாமி என்பவர் வசித்து வந்தார். தற்போது மாரடைப்பால் இறந்த அவரைத் தகனம் செய்ய, பொது எரியூட்டு மைதானத்தை பயன்படுத்த அவரது குடும்பத்தினருக்கு தடை விதிக்கப்பட்டது.

இறந்த மாரிச்சாமியின் சகோதரர் பேசியபோது, தனது அண்ணன் மாரிச்சாமி, அச்சம்தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏ.இராமலிங்கம் கிராமத்தில் இடம் வாங்கி வீடு கட்டி குடியேறியதாக தெரிவித்தார். அந்த ஊரில் உள்ள அனைத்து வரிகளையும் முறையாக கட்டியுள்ளார் என்றும் தெரிவித்தார். பொது விழாக்களுக்கு நன்கொடையும் வழங்கியுள்ளதாக கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாகவும், மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். பின்னர் அவரது ஈம சடங்குகளை ஏ.இராமலிங்கபுரம் பொது மயானத்தில் நடத்துவதற்கு ஊர் தலைவர் தட்சிணாமூர்த்தியிடம் அனுமதி கோரியுள்ளனர்.

பொது மயான மேடையில் ஈம சடங்குகளை நடத்தக்கூடாது என்றும், அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே பாத்தியப்பட்டது என்றும், விரும்பினால் அருகிலேயே வேறு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் ஊர் தலைவர் கூறியுள்ளார். அந்த ஊரில் உள்ள பிற சமூகத்தினரும், தனித்தனி இடங்களை தங்கள் குடும்பத்தினரின் ஈம சடங்குகளை செய்வதற்கு பயன்படுத்துகின்றனர்.

மேலும் மாரிச்சாமி ஏ.இராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் என்பதற்கு ஆதார் கார்டு போன்ற ஆவணங்களும் இருப்பதாக தெரிவித்தார். அவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அந்த இடத்தை விட்டு விரட்டியுள்ளனர். உடற்கூறாய்வு ஆவணம் இருந்த போதிலும் அதனை நிராகரித்துள்ளனர்.

இறப்பு நிகழ்ந்த வேளையில், இந்த பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்று, அவர்கள் கூறிய இடத்தில் இறுதி சடங்கினை நடத்தியதாக அவர் தெரிவித்தார். தங்களுக்கு நடந்த இந்த பிரச்சனை நாளை பற்றி பட்டியல் இனத்தவருக்கும் நடக்கக்கூடும். இதற்கு அரசாங்கத்தின் ஆதரவு உள்ளதா? என்றும் வினா எழுப்பினார்.

ஊர் தலைவர் தட்சிணாமூர்த்தி இது பற்றி கூறுகையில், மாரிச்சாமி மகன் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் மாரிச்சாமி மரணத்தில் சந்தேகம் உள்ளதென்றும், அந்த ஊரில் ஒவ்வொரு இடமும் தனித்தனி பிரிவினருக்கு பாத்தியப்பட்டது என்றும் கூறினார். இது குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தெரியும் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள், ஏ.இராமலிங்கபுரம் கிராமத்தில் இருப்பது பொது மயானம் தான் என்றும், அங்கே எந்த பிரிவினருக்கும் எந்த நிலமும் பாத்தியப்பட்டதில்லை என்றும், அது முழுவதுமாக பொது பயன்பாட்டிற்காக அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தனர்.

Next Post

"அரசு பேருந்தில் அதிர்ச்சி.. மரப்பலகை உடைந்து விபத்து" மயிரிலையில் உயிர்தப்பிய பெண்மணி.!

Tue Feb 6 , 2024
சென்னை நகர பேருந்தில் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த பலகை உடைந்ததால் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் சென்ற பேருந்து என்.எஸ்.கே நகர் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த மரப்பலகை உடைந்துள்ளது. இதனால் இருக்கையில் […]

You May Like