நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.. ஏனெனில் அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. குறிப்பாக வருமான வரிச்சலுகை குறித்த எதிர்பார்ப்பு நடுத்தர மக்களிடம் எழுந்துள்ளது.. கடைசியாக 2012-ம் ஆண்டில் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.. அதன்பிறகு உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை..
தற்போதைய நடைமுறையின் படி ரூ. 2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.. ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10% வரியும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரியும் செலுத்த வேண்டும்.. ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30% வரி செலுத்த வேண்டும்..
இந்த சூழலில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.. அதன்படி தற்போதுள்ள ரூ.2.5 லட்சத்தில் இருந்து விலக்கு வரம்புகளை ரூ.5 லட்சமாக உயர்த்த நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய வருமான வரி விதிகளின்படி, விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சமாகவும், 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சமாகவும் உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விலக்கு வரம்பு ரூ.5 லட்சம் ஆக உள்ளது..