சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்து வந்த லேண்டரின் உயரம் குறைக்கும் பணி வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது. பின்னர், புவியின் சுற்றுவட்டப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்- 3 நுழைந்தது. இதற்கிடையே, நேற்றைய முன்தினம் புரபல்சன் பகுதியில் இருக்கும் விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புகைப்படத்தை 2-வது முறையாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதேபோல், நேற்று முதல் முறையாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. லேண்டரின் உயரம் குறைந்தபட்சமாக 113 கிலோமீட்டரும் அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நாளை மதியம் 2 மணியளவில் இரண்டாவது முறையாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இப்படி படிப்படியாக லேண்டரின் தூரம் குறைக்கப்பட்டு, ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இறுதிக்கட்ட பணிகள்:
நிலவின் குறைந்தபட்ச தூரத்தை எட்டிய பின், லேண்டரின் அடிப்பகுதியில் இருக்கும் 4 குட்டி ராக்கெட்டுகள் லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க உதவும். அப்படி தரையிறக்கப்பட்டபின் அதிலிருந்து சிறிய சாய்தளம் வெளியே வரும். பின்னர், விக்ரம் லேண்டரில் இருக்கும் பிரக்யான் எனும் ரோவர் சாய்தளத்தை பயன்படுத்தி வெளியே வரும். ரோவர் தான் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் கருவியாகும். இதனைத் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது, பல்வேறு தகவல்களை சேகரித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புவது தான் சந்திரயானின் இறுதி கட்டமாகும்.