சென்னை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மருத்துவர்கள் முதல், தொழிலதிபர்கள் வரையில் பலரை ஏமாற்றிய ஒரு பெண் மீது காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தலைமறைவாகி இருக்கிறார்.
காவல்துறையினர் இந்த புகார் பற்றி நடத்திய அதிரடி விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் மஞ்சுளா என்று தெரியவந்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் சென்னை மாவட்ட காவல்துறையினருக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில் தான், இந்த வழக்கை சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்ற சென்னை மாநகர காவல் ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும் என்றும், அவர் சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறார் என்றும் தெரியவந்தது.
ஏற்கனவே மயிலாப்பூர் பகுதியில் திருமணமாகி வசித்து வந்த அந்த பெண் தொடர்பாக சதீஷ்குமார் என்ற தொழிலதிபர் புகார் வழங்கியதை தொடர்ந்து, இந்த வழக்கு தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது. அந்த பெண் மயிலாப்பூர் பகுதியில் ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருவதாகவும், சமூக வலைதளத்தின் மூலமாக தன்னுடன் பழகியதாகவும் சதீஷ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடன் நெருக்கமாக பழகி, வாட்ஸப் மற்றும் பேஸ்புக் மூலமாக பேசத் தொடங்கினார் எனவும், அந்த தொழிலதிபர் சதீஷ்குமார் தெரிவித்திருக்கிறார். முதலில் மஞ்சுளா தன்னுடைய புகைப்படங்களை வாட்ஸப் மூலமாக சதீஷ்க்கு அனுப்பியதாக தெரிகிறது. பின்னர் சதீஷ்குமாரின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து, அவர் தொடர்பாக அவதூறு பரப்பியதாகவும் சதீஷ்குமார் கூறியுள்ளார்.
மஞ்சுளா தொடர்பாக அதே போல 3️ வெவ்வேறு பகுதிகளில் புகார்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சுளாவின் கணவரும் அவருடைய மகன்களுமே மஞ்சுளா மீது காவல்துறையினரிடம் புகார்கள் வழங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது