லடாக்கின் இந்தியாவிற்கு சொந்தமான 4067 சதுர கி.மீ நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறிவரும் நிலையில், அரசியலமைப்பின் 19வது பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நில ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக சமீபத்தில் சீனா, நிலையான புதிய வரைபடத்தை வெளியிட்டது. அதில், அருணாச்சல பிரதேசத்தின் அக்சாய் சின் பகுதி உள்ளிட்ட11 இடங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. சீனா தொடர்ந்து அத்துமீறி இந்திய நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தநிலையில், மோடி அரசு மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், சீனாவின் ஆக்கிரமிப்பு நில விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் கூறிவருவதாக சாடியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, லடாக்கின் இந்தியாவிற்கு சொந்தமான 4067 சதுர கி.மீ நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால், இந்த நிலங்களை சீனா கைப்பற்றவில்லை (கோய் ஆயா நஹின்) என்று பிரதமர் மோடி கூறிவருகிறார். அந்தவகையில் நில விவகாரத்தில் சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்பது தெரிகிறது. இதுகுறித்து மோடி அரசிடம் விளக்கும் வகையில் அரசியலமைப்பின் 19வது பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.