fbpx

ரஷ்யாவில் உள்நாட்டுப் போர்?? பின்னணி என்ன?

உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட தனியார் ராணுவ கூலிப்படையினர் எனக் கூறப்படும் வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்யாவில் தடை உள்ளது. எனினும், ரஷ்யா – உக்ரைன் போர் உச்சத்தில் இருந்தபோது, பக்முட் நகரைக் கைப்பற்றுவதில் வாக்னர் குழுவினர் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், தற்போது வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’ரஷ்ய ராணுவத் தலைமையை அழிப்போம் என்றும், எங்கள் வழியில் யார் குறுக்கே வந்தாலும் துவம்சம் செய்வோம்’ என்றும் வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே ரஷ்ய ராணுவத்தைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதிக்குள் தங்கள் படைகள் நுழைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை எதிர்த்து முன்னேறுகிறோம். வழியில் எது தடையாக இருந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம்” என்று எச்சரித்திருந்தார். மற்றொரு ஆடியோ ஒன்றில், “புதினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேசத்துரோகிகள் ஆவர். ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தின் முதுகில் குத்திவிட்டனர். ரஷ்யாவில் உள்நாட்டுப் போரை அனுமதிக்க முடியாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

ஆயுதக் கிளர்ச்சியை தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். ரஷ்யாவிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர முயன்றது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யாவுக்கு உதவும் வகையில் பணியமர்த்தப்பட்ட தனியார் ராணுவ ஒப்பந்ததாரர்களே வாக்னர் ஆயுதக் குழுவினர். சிரியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் செயல்பாட்டில் உள்ள இந்தக் குழு, போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுக்கும் ஆளானது.

இந்தக் காலகட்டத்தில்தான் வாக்னர் குழு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் பல குற்றவாளிகள் வாக்னருடன் இணைந்ததாக நம்பப்படுகிறது. குழுவில் இணைந்து பணியாற்றும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதோடு, ஆறு மாதங்கள் பணியாற்றிய பின்னர் அவர்களது தண்டனையும் குறைக்கப்படும் என்று அவர்களிடம் கூறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளரான ஜான் கிர்பி, ”இந்தக் குழு இப்போது அதிகாரத்தில் உள்ள ரஷ்ய ராணுவத்திற்குப் போட்டியாக இருக்கும்” என கடந்த 6 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இன்று ரஷ்ய அரசை அச்சுறுத்தி வரும் பிரிகோஸின், கடந்த 1961ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தவர். 1981ஆம் ஆண்டு, கொள்ளை மற்றும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த பிரிகோஸினுக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அதிலிருந்து விடுதலையான அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உணவகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்தச் சூழலில்தான் அப்போது நகரின் துணை மேயராக இருந்த புதினின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன்மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். மேலும் புதினின் நட்பு வட்டத்தால் சமையல் வணிகத்தில் அவர், ரஷ்ய அரசாங்க ஒப்பந்தங்களை அதிகமாகப் பெற்றுள்ளார். இதனால், ’புதினின் சமையல்காரர்’ என்றும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறார்.

ரஷ்ய ராணுவத்தால் செய்ய முடியாத சில சட்டவிரோதச் செயல்களை விளாடிமிர் புதின், வாக்னர் ஆயுதக் குழுவின் மூலம் மேற்கொண்டதாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் குற்றம்சாட்டின. இது ரஷ்யாவுக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. மேலும், உக்ரைனில் டொனெட்ஸ்க் பகுதியில் உப்புச் சுரங்க நகரமான சோலேடரை ரஷ்யா கைப்பற்றியது. ’இந்த நகரை நாங்களே கைப்பற்றினோம். வாக்னர் குழுவின் வெற்றியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பறிக்க நினைக்கின்றன’ என வாக்னர் யெவ்ஜெனி பிரிகோஸின் குற்றம்சாட்டினார். இதனால் வெகுண்ட அவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்குத் தயாராகி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரம் காட்டியதாகவும், அது தற்போது வெடிக்கத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே உக்ரைனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர், ரஷ்யாவின் தென்பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாகவும், அங்கிருந்து அவர்கள் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ரஷ்ய மக்கள், “இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஆங்காங்கே குண்டு சத்தம் மட்டும் கேட்கிறது. மக்கள் ஆங்காங்கே ஓடுகின்றனர். எங்களுக்கு மிகவும் பதற்றமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

Maha

Next Post

தண்டட்டி : இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாமோ..!

Sun Jun 25 , 2023
தங்கப்பொண்ணு (ரோகினி) கிடாரிப்பட்டியை சேர்ந்தவர். முதுமையிலும் குடும்பத்துக்காக பல கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு வாழ்கிறார். திடீரென இவர் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகியும் திரும்ப வராததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருகின்றனர் அவரது குடும்பத்தினர். கிடாரிபட்டிக்கு என ஒரு கட்டுப்பாடு உண்டு அங்கு போலீஸ் நுழையக் கூடாது, மீறி ஊர் விஷயங்களில் தலையிட்டால் கொலை செய்யக் கூட தயங்கமாட்டார்கள். இந்த சூழலில் தங்கப்பொண்ணை தேடித் தர முன் […]

You May Like