கோவையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வரும் நிலையில், தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். குனியமுத்தூர் அருகே சென்ற போது அங்கு சாலை குண்டும், குழியுமாக இருந்துள்ளது. அப்போது, அந்த குழியில் கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏரி இறங்கிய போது நிலை தடுமாறி அவ்வழியாக வந்த வாலிபரின் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி ஸ்கூட்டரில் வந்த வாலிபரிடம் லேசாக சிரித்தபடி மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. உடனே அந்த வாலிபர் மோதலை மறந்து விட்டு அந்த மாணவி தன்னிடம் சிரித்துப் பேசுகிறார் என நினைத்து, அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும், மாணவியின் ஸ்கூட்டரை வழிமறித்தார்.
பின்னர் அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். சற்றும் எதிர்பாராத நேரத்தில், மாணவியின் கையைப் பிடித்து கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் தப்பிச் சென்றார். பின்னர், இதுகுறித்து அந்த மாணவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிக்கு முத்தம் கொடுத்த கோவை புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் என்பவரை கைது செய்தனர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மாணவி சம்பவம் நடந்த போது சிரித்தபடி பேசியதால் அதை தவறாக எடுத்துக் கொண்டு, முத்தமிட்டது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் முஹம்மத் செரீப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.