இந்தியாவில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என்பது கனடா வாழ் சீக்கியர்களின் இலக்கு. இந்தியாவின் காலிஸ்தான் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. இந்த ரத்தம் தோய்ந்த அத்தியாத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதுதான் சீக்கிய பயங்கரவாத கும்பலின் இலக்கு. இதற்காகவே காலிஸ்தான் என்ற பெயரில் பல்வேறு இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
கனடாவில் இருக்கும் சீக்கிய குருத்வாராக்கள் இந்த பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. கனடாவில் பதுங்கி இருந்த இந்தியாவால் தேடப்படுகிற பயங்கரவாதி நிஜ்ஜார் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கனடாவோ, எங்கள் நாட்டு குடியுரிமை பெற்ற நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவுக்கு பங்கு இருக்கிறது என குற்றம்சாட்டியது. இதனால், இந்தியா – கனடா உறவு முறிந்து போய்விட்டது. கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட இந்தியாவும் அதே பாணியில் டெல்லியை விட்டு கனேடிய தூதரக அதிகாரியை துரத்திவிட்டது.
இந்நிலையில், எரிகிற நெருப்பில் பெட்ரோல் டேங்கை கவிழ்ப்பது போல, சீக்கிய பயங்கரவாதிகள் ஒரு வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட செர்ரி நகர குருத்வாரா ஒன்றில் ஒரு பேனரை கட்டி வைத்துள்ளனர். அதில் சீக்கிய பயங்கரவாதிகள் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் 3 இந்திய தூதரக அதிகாரிகள் கொல்லப்பட வேண்டும். அதாவது 3 இந்திய தூதரக அதிகாரிகளை படுகொலை செய்ய அழைப்பு விடுத்து அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் 3 இந்திய தூதரக அதிகாரிகள் படங்கள், பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் புகலிடமாக உருமாறிப் போய்விட்டது கனடா என்பதற்கு இதைவிட வேறு சாட்சி இருக்கவே முடியாது என்பதை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுவிட்டது நமது நாடு. இதனால் ஆடிப் போயிருக்கிறது கனடா. அத்துடன் உடனடியாக இந்தியாவுக்கு எதிரான இத்தகைய பேனர்கள், போஸ்டர்களை குருத்வாராக்கள் நிறுத்தவும் கனடா உத்தரவிட்டுள்ளது. குருத்வாராக்களில் லவுட் ஸ்பீக்கர் மூலம் பிரசங்கங்கள் நிகழ்த்தவும் கனடா அரசு தடை விதித்துள்ளது.