30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கான பதிலடியாக, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிந்து நதியைத் தடுத்து நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது சிறிதும் நியாயமற்றச் செயலாகும். தங்கள் உயிரைப் பணயம் வைத்து சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றிய உள்ளூர் காஷ்மீர் மக்களும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.
சுற்றுலா சென்ற இந்திய மக்களை சுட்டுக் கொன்றது பயரங்கவாதிகள்தானே தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் இல்லை. இந்த தாக்குதலுக்கு குறிப்பிட்ட ஒரு மதத்தின் மீது பழிபோடுவதோ, குறிப்பிட்ட மக்களை பலிகொடுப்பதோ ஒருபோதும் அறமாகாது. உண்மையிலேயே பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்றால் பயங்கரவாதிகளையும், அதற்கு உதவியர்களையுமே தண்டிக்க வேண்டும். அவர்களின் முகாம்களை தாக்கி அழிக்க வேண்டும். பயங்கரவாத செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசோ, ராணுவமோ இருந்தால் அவர்களுடன் நேரடியாக மோத வேண்டும். அதை விட்டு விட்டு, 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குடிநீரையும், அவர்களின் உணவுத்தேவையை நிறைவு செய்யும் விவசாய பாசன நீரையும் தடுப்பது எந்த வகையில் நியாயமாகும்..?
நதிநீர் என்பது வெறும் மனிததேவை மட்டுமின்றி, மரங்கள், கால்நடைகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து உயிர்களின் இன்றியமையாத உயிர் ஆதாரத்தேவையாகும். உயர்ந்த நோக்கங்களோ, உன்னத லட்சியங்களோ இல்லாது அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கும், சிந்து நதியை முடக்கி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க முயலும் பாஜக அரசின் செயலுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
பாகிஸ்தானுக்கு எதிராக இத்தனை நடவடிக்கைகளை எடுக்கும் இந்திய அரசு, இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாகிஸ்தான் இஸ்லாமியர் நாடு என்பதால் பகை நாடென பதறி துடிக்கும் இந்திய அரசுக்கு, இத்தனை படுகொலைகள் செய்த பிறகும் இலங்கை நட்பு நாடாக இருப்பதற்கு காரணம் கொன்றது சிங்களவர், கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால்தானே..?
சிந்து, கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி என்று எல்லா நதிகளுக்கும் பெண்களின் பெயரைச்சூட்டி நதிகளை தெய்வமாக வணங்கும் நாடு, மனிதனின் தீராத பாவங்கள் எல்லாம் கங்கை நதியில் மூழ்கினால் தீரும் என்று நம்புகின்ற நாடு, எப்போது கோடிக்கணக்கான மக்களை கடுமையாக தண்டிப்பது முறைதானா? ஆகவே, 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.