பள்ளிக் கல்வித்துறை, அரசு முதன்மைச் செயலாளர், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலமாக அனுப்பி இருக்கும் சுற்றிக்கை:-
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எதிர்வரும் மழைக் காலத்தை கருத்தில் கொண்டு செய்ய வேண்டிய கட்டிட பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
எல்லா பள்ளிகளிலும் மரங்கள் இருக்கின்றன. மரத்தில் இருந்து உதிரும் இலைகள் பள்ளிக் கட்டிட மேற்கூரையில் விழுந்து குப்பையாக உள்ளது. இது பல பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது தெரிய வந்தது. மழையின்போது இந்த குப்பைகள் நீரில் நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கூரையில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு கட்டிடத்தின் மேற்கூரையில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும், மழை நீர் வடிவதற்கான துவாரங்கள் இலை தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறு தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பள்ளிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து சுகாதாரமான சூழலில் பள்ளி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தில், புதர்கள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி பார்ப்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்குமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி மாணவர்களை இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளி பராமரிப்பு மானியத்தினைக் கொண்டு வெளி ஆட்கள் அல்லது உள்ளூரில் இருக்கும், பணியாளர்களை கொண்டு இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தை தூய்மை செய்வதற்கு 100- நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களை கொண்டு செய்வதற்கு, உரிய அலுவலர்களை அணுகிப் அனுமதி பெற்று, பள்ளியின் பராமரிப்பு பணிகளை சீர் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம். நடமாடும் மருத்துவக் குழு. ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும் தலைமை ஆசிரியர் அறையிலும் எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.