சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது..
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.. இதனிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக தவறிழைத்தோர் மீது நடவடிகை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்தது..
சேலம் பெரியார் பல்கலைக்கழக் தேர்வில் சாதி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி தொடர்பாக உயர்கல்வித்துறையின் உயர் அலுவலர் தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.. அந்த விசாரணையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது..
இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை தேர்வில் சாதிரீதியான கேள்வி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.. உயர்கல்வித்துறை இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.. உயர்கல்வித்துறை துணை செயலாளர் தனசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் விசாரணை அலுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்..
இந்த குழு விசாரணை செய்வதற்கு தேவையான அனைத்து அலுவலக வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த குழு விசாரணையை முடித்து ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.. அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது..