நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் இன்று அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 5000-ஐ தாண்டியது… இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.. கொரோனா காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091ல் இருந்து 25,567 அதிகரித்துள்ளது..
தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.75% ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சக இணையதளம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,826 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.. இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,82,538 ஆக அதிகரித்துள்ளது. தினசரி நேர்மறை விகிதம் 3.32 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 2.89 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன..
ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.. வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுவத்து குறித்தும், நோய் தொற்றை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.. மேலும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் மத்திய அரசு அறிவுரைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும்..