ஒரு வயதே ஆன நாய் குட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கயின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் ஆஷு மாரசிங். 51 வயதான ஆஷூ, அவரது காதலியின் செல்ல நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தியுள்ளார். ஆஷு மாரசிங்க தனது முன்னாள் காதலியின் நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கடந்த 23ஆம் தேதி ஆஷு மாரசிங்கவின் முன்னாள் காதலி ஆதர்ஷா கரந்தனா குற்றச்சாட்டு கூறியிருந்தார். ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆஷு மாரசிங்காவின் காதலி ஆதர்ஷா கரந்தனா ஆகிய இருவரும் இந்த குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டனர். இந்த செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாகவே ஆஷூ ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். ஆஷூ மாரசிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு ஹிருணிகா பிரேமசந்திர, புலனாய்வு அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாய்க்குட்டிக்கு பதிலாக ஒரு வயதே ஆன சிறுமியோ அல்லது சிறுவனோ இருந்திருந்தால், அவர்களாலும் பேசியிருக்க முடியாது. அந்த குழந்தைகளுக்கு தெரியாதல்லவா? இந்த நாய் குட்டிக்கும் ஒரு வயது.

ஒரு வயதான குழந்தையாக இருந்திருந்தால், இந்த நபர் செய்ததை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் யாரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். இதில் உள்ள விஷயத்தை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர் சாதாரண நபர் கிடையாது. அதிபரின் ஆலோசகர். இந்நிலையில், இந்த நபருக்கு தூதுவர் பதவி வழங்கி வெளிநாட்டிற்கு அனுப்ப அதிபர் முயற்சிக்கின்றாராம் என குற்றம் சுமத்தியிருந்தார். இந்த விவகாரம் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.