போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீரின் வங்கிக் கணக்கில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளதாக அமலாக்கத்துறை பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மதிப்பில் போதைப்பொருள் கடத்தியதாக திமுக முன்னாள் நிர்வாகியும், சினிமா தயாராரிப்பாளருமான ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி ஜாபர் ஜாதிக்கை அதிரடியாக கைது செய்தது. இதையடுத்து, அவரின் சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் இயக்குனர் அமீர் உட்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். ஜாபர் சாதிக்கின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வந்த 8 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, இயக்குனர் அமீரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில் தான், இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், இருவருக்கும் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் தான், தற்போது இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில், “சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.
பின்னர், அதன் மூலம் சம்பாதித்த தொகையில் சொகுசு கார்கள், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். ஜாபர் சாதிக் தனது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கு மட்டுமன்றி, திரைப்பட இயக்குனர் அமீரின் வங்கிக் கணக்கு மற்றும் போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். மேலும், ஜாபர் சாதிக் திமுக நிர்வாகியாக இருந்ததால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. இதனால், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கக் கூடாது” என அமலாக்கத்துறை தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறை பதில்மனு தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை மார்ச் 2-வது வாரத்திற்கு நீதிபதி சுந்தர் மோகன் தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Read More : ’என்னை வேற ஹாஸ்பிட்டலுக்கு மாத்துங்க’..!! ஆம்ஸ்ட்ராங் கொலையாளியின் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்..!!