சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் கழிவுநீருடன் கச்சா எண்ணெயும் கலந்து சாலையில் வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு ஏற்கனவே குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் மாசுபட்டது. பொதுமக்களின் புகாரை அடுத்து சரி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நேதாஜி நகர் பகுதியில் கழிவுநீரில் கச்சா எண்ணெய் கலந்து சாலையில் வெளியேறுவதால் தீ விபத்து அபாயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் குழந்தைகளும் பொதுமக்களும் நடந்து கூட செல்ல முடியவில்லை எனவும் முழுவதுமாக எண்ணெய் படலங்களாக சாலைகள் காட்சி அளிக்கக் கூடிய நிலையில், நிலத்தடி நீர் முழுவதும் கழிவுநீரில் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையில்லாத எண்ணெய்களை திறந்து விடுவதாகவும் பலமுறை புகார் அளித்தும் இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் விடுவிக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி 4-வது மண்டலத்தின் மண்டல குழு தலைவராக இருக்க கூடிய நேதாஜி.யு.கணேசன் கவுன்சிலராக இருக்கக்கூடிய வார்டில் இது போன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சில இடங்களில் கச்சா எண்ணெய் குடிநீரில் கலந்து வருவதால் பொதுமக்கள் என்ன செய்வதரியாது என திகைத்து போய் உள்ளதாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர் மற்றும் குடிநீரில் கச்சா எண்ணெய் கலந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் சுத்தமான குடிநீரும் சுகாதாரமான சாலைகள் அமைத்த தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.