கடலூரில் தவறான சிகிச்சையால் பெண்ணின் கைவிரல் அழுகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி பகுதியில் உள்ள திராசில் குப்பு என்பவர் வசித்து வருகிறார். சென்ற மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். சிகிச்சையின் போது நரம்பு ஊசி செலுத்துவதற்காக அவரின் வலது கையில் துளைக்கருவி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறகு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் வீடு திரும்பிய சில நாட்களிலே அவரது வலது கையில் உள்ள விரல்கள் அழுகியிருந்தன. மேலும் இதனால் அதிர்ச்சியடைந்ததால், மீண்டும் மருத்துவர்களை சந்தித்து இதனை பற்றி கூறியுள்ளார். அப்போது மருத்துவர்கள், தானாக சரியாகி விடும் என்று அவரிடம் கூறியுள்ளனர்.
இதனிடையே குப்பு மற்றும் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ள நிலையில் , கை விரல்கள் அழுகியது பற்றி புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளனர். கையில் குத்தப்பட்ட துளைக்கருவியினால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களிடம் கூறியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தவறான சிகிச்சையினால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்ததை தொடர்ந்து மேலும் கடலூரில் பெண் ஒருவருக்கு தவறான சிகிச்சை நடந்த சம்பவம் மருத்துவர்களின் மீதான நம்பிக்கைத் தன்மையை இழக்கச் செய்யும் விதமாக அமைந்து வருகிறது. இதனை குறித்து, தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.