திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை மேலமேடு வடக்கு கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (85). இவருக்கு பெரியக்காள், கொழுந்தாயி என 2 மனைவிகள். முதல் மனைவிக்கு உழவன் என்ற உலகநாதன் என்பவரும், இரண்டாம் மனைவிக்கு கணேசன் என்ற மகனும் உள்ளனர். 2வது மனைவி கொழுந்தாயி இறந்துவிட்டார். பெரியக்காள் உயிருடன் உள்ளார். இந்நிலையில், மாணிக்கம் தனது சொத்துக்களை 2 மகன்களுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு உயில் எழுதி வைத்ததாகவும், பின்னர் 2017இல் உயிலை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, கணேசன் தனக்கு உரிய பாகத்திற்கு பட்டா பெற்று, அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரும் இறந்துவிட்டார். இதையடுத்து, அந்த நிலத்தில் கணேசனின் மனைவி மருதம்பாள் விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில் மருதாம்பாளுக்கும், மாமனார் மாணிக்கத்துக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று இரவும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மருதாம்பாள், மாணிக்கத்தை கொடுவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணிக்கம், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மருதாம்பாளை தேடி வருகின்றனர்.