வலி நிவாரணி மாத்திரைகளை சிரிஞ்சு மூலம் போதைக்காக தனக்குத் தானே செலுத்திக் கொண்ட மாணவன், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய்குமார் (20) என்பவர் பி.இ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், அஜய்குமார் கடந்த 13ஆம் தேதி திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜய் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
![வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்திய இளைஞர் மரணம்..! மருந்துக்கடை உரிமையாளர் கைது](https://1newsnation.com/wp-content/uploads/2020/10/Injection-1-1024x769.jpg)
இதையடுத்து, மாணவன் அஜய்யின் தந்தை சவுந்தரபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் இயற்கைக்கு முரணான மரணம் என மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இறந்த மாணவனின் பிரேத பரிசோதனையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் ஏற்றப்பட்டதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இறந்த மாணவர் வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தண்ணீரில் கரைத்து சிரிஞ்சு மூலமாக போதைக்காக தனக்குத்தானே செலுத்திக் கொண்டது தெரியவந்தது.
![வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்திய இளைஞர் மரணம்..! மருந்துக்கடை உரிமையாளர் கைது](https://1newsnation.com/wp-content/uploads/2022/05/Death-e1652873062663.jpg)
மேலும் இறந்த மாணவனின் நண்பர்களிடம் விசாரணை செய்ததில், அந்த வலி நிவாரணி மருந்தை கும்பகோணத்தில் தனியார் மருந்து கடை வைத்திருக்கும் முகமது பஷீர் என்பவர் எவ்வித மருத்துவர் பரிந்துரை இல்லாமல், லாப நோக்கத்தோடு இம்மாணவனுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது அம்பலமானது. எனவே, மேற்படி வழக்கின் சட்டப்பிரிவை மாற்றம் செய்து, போதை ஏற்படுத்தக் கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்த குற்றத்திற்காக முகமது பஷீரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.